பொன்னமராவதி, மே 28: பொன்னமராவதி அருகே காரையூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இக்கோயில் திருவிழா கடந்த 19ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் கோலாகலமாக தொடங்கியது. அன்றைய தினமே சுவாமிக்கு காப்புக் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து தினசரி மண்டகப்படி நடைபெற்று சுவாமி வீதிவுலா சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் 26ம் தேதி பொங்கல் விழா நடந்தது. இந்த கோயிலின் முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை எழுந்தருள செய்தனர். பின்னர் தேரை காரையூர் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் வடம் பிடித்து தேர் இழுத்து அம்மனை வழிபட்டனர். தேர் முக்கிய வீதிவழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.